தென்காசியில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!


தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகன தொடக்க விழா இன்று நடைபெற்றது.

ஊர்தியின் சாவியை ஓட்டுநர்களிடம் வழங்கி தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி எம்பி-யான டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏ-வான ஈ.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசும்போது, ''கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரிக்கவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும், இரண்டாம் வெண்மை புரட்சியை ஏற்படுத்தவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தென்காசி மாவட்டத்தில் முதல்கட்டமாக 2 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சங்கரன்கோவில் மற்றும் மேலநீலிதநல்லூர் ஒன்றியப் பகுதிகளில் சேவையாற்ற சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தலைமையிடமாக கொண்டு இரண்டு சிகிச்சை ஊர்திகள் செயல்பட உள்ளன.

கால்நடை மருத்துவ வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், ஒரு ஓட்டுநர் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இந்த மருத்துவ வாகனங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சை பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகளை மேற்கொள்ளவும், பிற்பகலில் கால்சென்டர் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகளை மேற்கொள்ளவும் உள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படுவோர் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தகவல் அளித்தால் அதன் மூலமும் சம்பந்தப்பட்ட இடத்துக்கே வந்து சிகிச்சையளிக்கப்படும்.

இந்த கால்நடை மருத்துவ வாகனங்கள் கால்நடை சிகிச்சை முகாம்கள், கால்நடை தடுப்பூசி முகாம்கள், கால்நடை பராமரிப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு முகாம்களிலும் செயல்படுத்தப்படும். ஒரு லட்சம் கால்நடை எண்ணிக்கை அலகுகள் கொண்ட பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற இலக்கை கொண்டு, கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் கால்நடை சிகிச்சைக்கு தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள், சிறிய ஆய்வுக்கூடம், தடுப்பூசிகளுக்கான குளிர்சாதனப்பெட்டி போன்ற வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ரிச்சர்டு ராஜ், உதவி இயக்குநர்கள் சுமதி, திருநாவுக்கரசு, ரஹ்மத்துல்லா, முருகன், சங்கரன்கோவில் ஒன்றியக்குழு தலைவர் சங்கர பாண்டியன், துணைத் தலைவர் செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி, துணைத் தலைவர் மகேஸ்வரி, கால்நடை உதவி மருத்துவர்கள் அந்தோணிராஜ், நாகராஜன், வசந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

x