சீமான் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சி!


சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவாக பேசிய குற்றச்சாட்டில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்.சி/எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அஜேஷ் என்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பரப்புரையின் போது, முன்னாள் முதல்வர் கருணாநிதியை குறிப்பிட்ட சமுதாயத்தை குறிக்கும் சொல்லாடலைப் பயன்படுத்தி இழிவுபடுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் பாடல் பாடிய விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குற்றாலத்தில் வைத்து சாட்டை துரைமுருகன் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதை விமர்சனம் செய்த நாதக தலைவர் சீமான், “நானும் அதே வார்த்தையை கூறுகிறேன். முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள். அந்தப் பாடலை எழுதியது வேறு யாரோ. அவர்கள் எழுதியதையே நாங்கள் பாடினோம்" என்று ஆவேசமாகக் கூறினார். இதற்காக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஜேஷ் என்பவர் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர் மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத்தை நாடினார்.

இந்த நிலையில், இது தொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் காவல் நிலையத்திற்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

x