ஆவடி அருகே திருமுல்லைவாயில் காலணி கடையில் திடீர் தீ விபத்து 


ஆவடி: திருமுல்லைவாயிலில் காலணி கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயில் சி.டி.எச் சாலையில் கார்த்திக் என்பவருக்கு சொந்தமான காலணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கம் போல் நேற்றிரவு வியாபாரம் முடிந்து காலணி கடை மூடப்பட்டது.

இச்சூழலில், இன்று அதிகாலை வேளையில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிதுநேரத்தில் கடையின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிய தொடங்கியது. அதன்பின்னர் தீ மளமளவென கடைமுழுவதும் பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து அங்கு வந்த ஆவடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும் அதற்குள்ளாக கடை முற்றிலுமாக எரிந்துவிட்டது. இதனால் கடையில் இருந்த காலணிகள், பள்ளி குழந்தைகளுக்கான பைகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. தீ விபத்து குறித்து திருமுல்லைவாயில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x