இ-சேவை மையங்களில் சேவை குறைபாடு புகார்: 44 தற்காலிக தரவு உள்ளீட்டாளர்கள் இடமாற்றம்


சென்னை: சென்னையில் உள்ள அரசு இ-சேவை மையங்களில், சேவை குறைபாடு குறித்து வந்த புகார்களின்பேரில், 44 தற்காலிக தரவு உள்ளீட்டாளர்களை இடம் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு கேபிள் டிவிநிறுவனத்தின் மூலம் 530 அரசு இ-சேவைமையங்கள் மற்றும் 328 நிரந்தர ஆதார் சேர்க்கைமையங்கள், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள் மற்றும் சமுக நலன் சார்ந்த170-க்கும் மேற்பட்ட சேவைகளை ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்டம், வார்டு அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால், சென்னை மாவட்டத்தில் செயல்படும் இ-சேவை மையங்களில் வெளிமுகமை நிறுவனம் மூலம் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் தரவு உள்ளீட்டாளர்களின் சேவைகளில் குறைபாடுகள் உள்ளதாக அரசின் கவனத்துக்கு வந்தது.

அதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சேவை வழங்க ஏதுவாக, தற்போது சென்னை மாவட்டத்தில் ஒரேஇடத்தில் நீண்ட காலமாகப் பணிபுரிந்து வரும்44 அரசு இ-சேவை மைய தரவு உள்ளீட்டாளர்களை, சென்னை மாவட்டத்துக்குள் பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

x