‘பொது அமைதிக்கு இடையூறு கூடாது’ - விநாயகர் சதுர்த்தி சிலை அமைப்பாளர்களுக்கு கோவை ஆட்சியர் அறிவுரை


விநாயகர் சதுர்த்தி விழா ஒருங்கிணைப்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடந்தது.

கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து சிலை அமைப்பாளர்கள் மற்றும் இந்து அமைப்பு பிரதிநிதிகள், அனைத்து ஜமாத், பள்ளிவாசல் நிர்வாகிகளுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்து பேசியதாவது: “விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, சிலை வைக்கும் அமைப்பினர் காவல்துறை, வருவாய் கோட்டாட்சியரிடம் தடையின்மை சான்று பெற்று இருக்க வேண்டும். சிலை நிறுவப்படும் இடம் தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளரிடமிருந்தும், அரசு புறம்போக்காக இருந்தால் சம்பந்தப்பட்ட துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நெடுஞ்சாலை துறை ஆகிய அலுவலர்களிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்று இருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலரிடம் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த உரிய அனுமதி பெற வேண்டும். தீயணைப்பு அலுவலரிடமிருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிலை அமைவிடம் தீ தடுப்பு வசதிகளை கொண்டுள்ளது என்பதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். தற்காலிக மின் இணைப்பு பெற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் துறையின் ஒப்புதல் கடிதம் பெறப்பட வேண்டும்.

நிறுவப்படும் சிலைகள் தூய களிமண் தயாரிக்கப்பட வேண்டும். சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ், தடை செய்யப்பட்ட பொருட்களான வண்ணங்கள் பூசப்பட்ட சிலை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு. வாரியத்தால் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு சிலைகள் அமைக்கக் கூடாது. எளிதில் நீரில் கரையக்கூடிய நச்சு அல்லாத இயற்கை வண்ணங்களை பயன்படுத்த வேண்டும். ரசாயன சாயங்களை பயன்படுத்தக் கூடாது.

சிலை அமைப்பாளர்கள் எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பந்தல் அருகே தற்காலிக முதலுதவி மற்றும் அவசர கால மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். நிறுவப்பட்ட அல்லது அமைக்கப்படவுள்ள சிலைகளின் உயரம் தரை தளத்தில் இருந்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனை. கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் சிலைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும். கூம்பு வகை ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது. மாறாக பெட்டி வகை ஒலி பெருக்கிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

நான்கு சக்கர வாகனங்கள் மினி லாரி மற்றும் டிராக்டர் ஆகியவற்றில் சிலைகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மாட்டு வண்டி, மீன் வண்டி மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல அனுமதியில்லை. ஊர்வலமாக கொண்டு செல்லும் பாதைகளில் பட்டாசு பயன்படுத்த அனுமதியில்லை.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பொது அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எவ்வித இடையூறு ஏற்படாமல் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறும் நிபந்தனைகளை முழுமையாக கடைபிடித்து விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார். மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மாநகர காவல் துணை ஆணையர்கள் ஸ்டாலின், அசோக்குமார்(போக்குவரத்து) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

x