மோசமான வானிலையால் அந்தமான் பயணிகள் விமானம் மீண்டும் சென்னை திரும்பியது


சென்னை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட்டது. விமானத்தில் 142 பயணிகள் இருந்தனர். அந்தமானை நெருங்கியபோது, மோசமான வானிலை நிலவியதால், விமானம் தரையிறங்க முடியவில்லை.

விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, விமானம் மீண்டும் சென்னைக்கு திருப்பி கொண்டு வரப்பட்டு, பிற்பகலில் சென்னையில் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.

அந்தமானில் நிலவும் மோசமான வானிலையால் விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் விமானம் மே 23-ம் தேதி (இன்று) அந்தமானுக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மே 23-ம் தேதி அல்லது வேறு ஏதாவது நாளில் நீங்கள் பயணம் செய்யலாம். அதற்கு ஏற்ப உங்கள் பயண டிக்கெட் மாற்றி கொடுக்கப்படும். இல்லையென்றால் உங்கள் பயண கட்டணம் விதிமுறைகளின்படி திருப்பி அளிக்கப்படும் என்று பயணிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

x