ஆக்ஸ்போர்டில் மேற்படிப்பு: இன்றிரவு வெளிநாடு செல்வதாக அண்ணாமலை அறிவிப்பு!


சென்னை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காக இன்றிரவு வெளிநாடு செல்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புக்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செல்ல உள்ளார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இன்று இரவு செல்கிறேன். நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், என் இதயம் இங்கே தான் இருக்கும்.

நான் வெளிநாடு சென்றாலும், ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன். சண்டை தொடரும். பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிராமங்களை நோக்கி பயணம் செல்ல இருக்கிறோம். பாஜக தரும் அலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து, உறுப்பினராக இணையலாம். முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மேற்கொண்ட வெளிநாடு பயணங்கள் தோல்வியில் தான் முடிந்தன.

எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனத்தை திரும்பப்பெற மாட்டேன். 39 வயது அண்ணாமலை பேசியது தவறு என்றால், 70 வயது பழனிசாமி பேசியது சரியா? முடிக்கு டை அடிப்பதால் மட்டும் இளைஞர் இல்லை, பேச்சு, செயல் என அனைத்தும் தான் இளைஞர் என்பதைக் காட்டும்” எனத் தெரிவித்துள்ளார்

x