விருதுநகரில் சாலை மறியல் போராட்டம்: ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 239 பேர் கைது 


விருதுநகர்: விருதுநகரில் இன்று காலை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 239 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்திற்கு அமைப்பின் பொதுச் செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். பொருளாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார். அரசு போக்குவரத்துக் கழக சிஐடியு மாவட்ட பொதுச் செயலாளர் வெள்ளத்துரை தொடக்க உரையாற்றினார்.

போராட்டத்தின்போது, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 105 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும், 2022 டிசம்பர் மாதம் முதல் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 239 பேரை பாண்டியன்நகர் போலீஸார் கைது செய்தனர்.

x