ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி: ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி


சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமலைக்கு, நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதிசென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பிபொன்னை பாலு உள்பட 27 பேரை போலீஸார் இதுவரைகைது செய்துள்ளனர். மேலும்,இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஏற்கெனவே, ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு உளவாளியாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் திருமலை, போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறைக்காவலர்கள் அவரை, உடனடியாக பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர் திருமலை என்று கூறப்படுகிறது.

x