மேடையில் துரைமுருகன் குறித்து பேசி திமுகவில் புயலை உருவாக்கி விட்டார் ரஜினி: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து


சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.

சென்னை: மேடையில் துரைமுருகன் குறித்து பேசி, திமுகவில் புயலை உருவாக்கிவிட்டார் ரஜினிகாந்த் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சுவாமி தரிசனம்செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கிருஷ்ணன் இந்த உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டியவர். கீதையை நம் அனைவருக்கும் அருளியவர். கிருஷ்ணர் பிறந்தநாளில், கோபாலபுரத்தில் உள்ளகோபாலை தரிசிப்பதில் நான்மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையில் மத, இன, சாதி பாகுபாடு பார்க்கவில்லை என்றால், முதல்வர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும். முதல்வர் தனது நம்பிக்கையை விட, பிறரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றாலும், இறைவனின் ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டு.

கட்சியில் புதிதாக இணைந்த விஜயதரணி, 6 மாதமாகியும் பதவி வழங்கவில்லை என தனதுஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அது இயல்புதான். பாஜகவில் யாரெல்லாம் இணைந்திருக்கிறார்களோ, அவர்களுக்கான அங்கீகாரத்தை பாஜக நிச்சயம் வழங்கும். எனவே, விஜயதரணி நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

திமுக, அதிமுக குறித்து மாநில தலைவர் அண்ணாமலைக்கு கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. முடிவு எடுப்பதற்கும் உரிமை இருக்கிறது. தற்போது அண்ணாமலையின் கருத்துக்கு என்னால் மறுப்பு பேச முடியாது. என்னைப் பொறுத்தவரை ஆட்சியில் இருந்து திமுக இறக்கப்பட வேண்டும். அதுதான் எங்களது ஒற்றைக் குறிக்கோள்.

மேடையில் துரைமுருகன் குறித்து பேசி, திமுகவில் புயலை உருவாக்கியிருக்கிறார் ரஜினிகாந்த். நான் சிறுவயதில் துரைமுருகன் வீட்டின் முன்பு மணலில் விளையாடி இருக்கிறேன். அவர் வீட்டின் முன்பு விளையாடிய நான், ஒரு கட்சியின் தலைவராகி, 2 மாநில ஆளுநராகி, தற்போது ஒரு கட்சியை பலப்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்.

மூத்த அரசியல்வாதியான துரைமுருகன் மாணவராக இருந்திருக்க முடியாது. கண்டிப்பாக ஆசிரியராகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால்தான் வாரிசு அரசியலை வேண்டாம் என்கிறோம். கட்சியில் உழைத்த திமுக தொண்டர்கள் இதை சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

x