தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் பழனிசாமி இன்று ஆஜர்


சென்னை: திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி, சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவுள்ளார்.

கடந்த ஏப்.15-ம் தேதி சென்னை புரசைவாக்கம் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி பேசினார்.

அப்போது, ‘மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 75 சதவீத தொகையை தொகுதிக்கு செலவு செய்யவில்லை’ என குற்றம்சாட்டி பேசியிருந்தார்.

இதையடுத்து, பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘தேர்தல் நேரத்தில் பழனிசாமி எனக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் துளிகூட உண்மை இல்லை.

தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.17 கோடியில் ரூ.17 லட்சம் தான் மீதம் உள்ளது. 95 சதவீதத்துக்கும் மேலான தொகை தொகுதியின் மேம்பாட்டுக்கு செலவழித்துள்ளேன். அதற்கான பணிகளையும் பட்டியலிட்டுள்ளேன்.

அரசியல் உள்நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது பேச்சு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையி்ல் உள்ளது. எனவே, அவர் மீது குற்றவியல் அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று (ஆக.27) விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி இன்று ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

x