கள்ளிக்கோட்டையில் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு


ராமேசுவரம்: ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, பரமக்குடி அருகே இடிந்த நிலையில் உள்ள கள்ளிக்கோட்டை சிவன் கோயிலை ஆய்வுசெய்தபோது, அங்கு இரு துண்டு கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: கள்ளிக்கோட்டை கோயில் சிவன் சந்நிதியில் 6 துண்டு கல்வெட்டுகளையும், அம்மன் சந்நிதியில் ஒரு கல்வெட்டையும் மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் குழுவினர் ஏற்கெனவே எடுத்து பதிவு செய்துள்ளனர்.

தற்போது புதிதாக சிவன் சந்நிதியின் முன்மண்டபத்தின் கீழே ஜகதியின் பக்கவாட்டிலும், மேற்பகுதியிலும் இந்த 2 துண்டு கல்வெட்டுகள்கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் கி.பி.13-ம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டுகள் ஆகும்.

இதில் இரண்டு வரிகள் உள்ளஒரு கல்வெட்டில் கோமாறபன்மறான திரிபுவனச் சக்கரவத்தி என முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனை குறிப்பிடுகிறது. மற்றொரு 4 வரிகள் கொண்ட கல்வெட்டில் இக்கோயிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்ட நிலத்தில் ஐப்பசி குறுவை விளையும் களத்துக்கு ஒன்று பாதியும், (சந்தி)விக்கிரகப்பேறு ஆகிய வரிகளும் குறிப்பிடப் பட்டுள்ளன.

முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் காலத்தில் மூன்றாம் குலோத்துங்கசோழன், பாண்டிய நாட்டில் வீராபிஷேகம் செய்ய முனைந்தபோது அதைஎதிர்த்ததால், மட்டியூர், கள்ளிக்கோட்டை ஆகிய ஊர்களில் போர்நடந்தது. பாண்டியர் - சோழர் போருக்கு பிறகு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கள்ளிக்கோட்டையில் பள்ளிப்படை கோயிலாக கட்டப்பட்டிருக்கலாம்.

கோயிலில் மேற்கு நோக்கி சாய்ந்த நிலையில் சிறிய லிங்கம்,அம்மன் சந்நிதியில் அரைத்தூண்களில் நர்த்தன கணபதி, முருகன்,நின்றநிலையில் லகுலீசபாசுபதரின் சிறிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு கைகளுடன் நின்றநிலையிலான அரியவகை லகுலீசபாசுபதர் சிற்பம் உள்ளது. பெரும்பாலும் சிற்பங்கள் அமர்ந்தநிலையிலேயே கிடைத்துள்ளன.

இங்குள்ள ஒரு துண்டு கல்வெட்டு, இக்கோயிலில் இருந்த கோளகி மடம், அதன் ஆசாரியர் அவருடைய சிஷ்யர்கள் பற்றி குறிப்பிடுகிறது. சைவ மடங்களில் துறவிகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பணியை செய்து வந்ததில் பாசுபதம், லகுலீச பாசுபதம்,காளாமுகம் ஆகிய பிரிவினர் இருந்துள்ளனர்.

மேலும் அம்மன் சந்நிதியில் உள்ள கல்வெட்டில், நாடாமங்கலமான சுந்தரத்தோள் நல்லூர் என இவ்வூரும், நயினார் தவச்சக்கரவத்திஸ்வரமுடைய நயினார்என இறைவனும் அழைக்கப்பட்டுள்ளார். பாண்டியர், சோழர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அதேநேரத்தில் இடிந்து அழியும் நிலையில் உள்ள இக்கோயிலை பழமைமாறாமல் புதுப்பித்து பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

x