தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு


சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 31-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாட்டம் பார்வூட், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 3 செ.மீ., கோவை மாவட்டம் சின்கோனா, உபாசி தேயிலை ஆராய்ச்சி நிலையம், வால்பாறையில் 2 செ.மீ., கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம், தருமபுரி மாவட்டம் அரூர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், மேல் பவானி, கூடலூர் சந்தை, தேவாலாவில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 29-ம் தேதி வரை மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

x