தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்: ஓ.பன்னீர்செல்வம்


காரைக்குடி: தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைய சூழ்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ளோம். எதிர்காலத்தில் தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

என்னை தோற்கடிக்க சதி செய்தவர்கள் தான் தேர்தலில் காப்புத்தொகையை இழந்தனர். இதன்மூலம் எங்கள் பக்கம் அதிமுக தொண்டர்களும், மக்களும் இருக்கிறார்கள் என்று நிருபனமாகியுள்ளது. பழனிசாமிக்கு கருத்துக்கு சொல்லும் அளவுக்கு யாரும் தயாராக இல்லை. பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் தான் அதிமுக எழுச்சி பெறும். அதைத்தான் மக்களும் விரும்புகின்றனர். அதிமுகவை ஒன்று சேர்க்க நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.

எம்ஜிஆர் ,ஜெயலலிதா தங்களது இன்னுயிர் தந்து வளர்த்த இயக்கம் அதிமுக. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிமுகவை காப்பாற்றுகின்ற நிலை இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

பழனிசாமி சர்வாதிகார போக்கால் அதிமுகவை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டு, தொண்டர்கள், தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து வருகிறார். இதற்கு முடிவு கட்ட வேண்டியது அதிமுக தொண்டர்கள், மக்கள் தான்” இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

x