தமிழக அளவில் ஆக.27-ல் மறியல் போராட்டம்: போக்குவரத்து ஓய்வூதியர்கள் அறிவிப்பு


போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டம் | கோப்புப்படம்.

சென்னை: தமிழகம் தழுவிய அளவில் ஆக.27-ம் தேதி போக்குவரத்து ஓய்வூதியர்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நலஅமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறியதாவது: ''போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பிரச்சினை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஓய்வூதியர்களுக்கு 106 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், மேல்முறையீடு செய்து அரசு காலம் தாழ்த்துகிறது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை. மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை.

இது தொடர்பானவற்றுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஆக.16 முதல் இன்று வரை வீடுதோறும் தொழிலாளர்களிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்தோம். இதன் தொடர்ச்சியாக ஆக.27-ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் 9 இடங்களில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதன் பகுதியாக சென்னை, பல்லவன் இல்லம் அருகே மறியல் போராட்டம் நடைபெறும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x