முருகனை எதிர்த்தவர்கள் இப்போது முருகனுக்கு மாநாடு நடத்த வேண்டி இருக்கிறது - திமுகவை சாடும் தமிழிசை


கோவை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தாா்.

கோவை: “யாரெல்லாம் இந்து மதத்தையும் பாஜக கொள்கைகளையும் எதிர்த்தார்களோ, அவர்களெல்லாம் எங்களை நோக்கி வரவேண்டிய காலத்தின் கட்டாயம் வந்துவிட்டது,” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆளுநரும், பாஜக மாநில முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் இன்று (ஆக.24) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழக பாஜகவில் 42 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர். உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வருகிறோம். முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆன்மிக பூமி தான். சனாதன தர்மத்தை எதிர்த்துப் பேசினாலும், ஆன்மிகத்தை பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது.

ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்பதன் ஒரு உத்தி தான் இது. இதையும் அவர்கள் செய்து வைத்திருக்கின்றனர். இதேபோல எங்காவது சிறுபான்மையினர் மாநாடு நடந்தால் அதை முதல்வர் துவக்கி வைக்காமல் இருப்பாரா? முதல்வர் போகாவிட்டாலும் அமைச்சர் உதயநிதியாவது துவக்கி வைத்துவிடுவார். அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகத்துக்காகவே பிறந்தவர். ஆன்மிக உணர்வோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் அரசாங்கமே ஆன்மிக மாநாடு நடத்துவது தமிழகம் ஆன்மிகத்தின் பக்கம் தான் என்பதை காட்டுகின்றது. தமிழகத்தில் பெரியார் கொள்கையை பேசுபவர்கள், முருகனையும் வழிபட்டு, அண்ணாவின் கொள்கையை பின்பற்றியவர்கள் ஆண்டாளையும் பின்பற்ற வேண்டி இருக்கும். முத்தமிழ் முருகன் மாநாட்டுக்காக உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கும் முருக பக்தர்களுக்கு இங்கிருக்கும் முருக பக்தர்கள் என்ற முறையில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து சமய அறநிலையத் துறையைப் பொறுத்தவரை கோயில்களுக்குச் சொந்தமான இன்னும் பல நிலங்களை கையகப்படுத்த வேண்டி இருக்கிறது. இன்னும் பல வேலைகளை கோயில்களில் செய்ய வேண்டியிருக்கிறது. பல கோயில்களை மேம்படுத்தப்பட வேண்டி இருக்கிறது. விஜய்யின் தவெக கொடியிலே இருப்பது வாகை பூவா?, தூங்கு மூஞ்சி பூவா? என்று தெரியவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சகோதரர் யானைச் சின்னம் அவர்களுக்குச் சொந்தமானது என்று சொல்லி இருக்கிறார்.

அது தொடர்பான சட்ட ரீதியிலான சில கருத்துக்களையும் அவர் சொல்கிறார். விஜய் கட்சியை சேர்ந்தவர்கள் சட்ட ரீதியாக அதில் தவறு இருந்தால் மாற்றிக் கொள்ள வேண்டும் . விமர்சனங்கள் இல்லாமல் ஒரு கட்சி இருக்காது. விஜய் தனது கட்சிக் கொடி அறிமுகத்தை விமரிசையாக ஆரம்பித்தாரோ என்னவோ ஆனால், விமர்சனங்களோடு ஆரம்பித்திருக்கிறார். பிரதமர் உக்கிரைன் சென்று இருப்பது உலக தலைவர்களுக்கு முன்னுதாரணம். பாதிக்கப்பட்டவர்களுடன் நான் இருக்கிறேன் என சொல்லி இருக்கின்றார். உலக அமைதிக்காக பல நாடுகளில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் நமது பாரத பிரதமருக்கு தான் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுக்கும் பாமகவுக்கும் இடையில் எப்போதுமே பிணக்கமான சூழ்நிலைதான். கொள்கைரீதியாக எங்களுக்கும் அவர்களுக்கும் பிணக்கமான கொள்கைதான். இருந்தும் நாகரிகமான அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து இருக்கிறது. மாற்று அரசியலை பாஜக முன்னெடுத்துச் செல்கிறது. திமுகவுடன் பாஜக கூட்டணி என்பதெல்லாம் நாணய விழாவோடு போய்விட்டது. அதிமுகவால் பாஜக வெற்றி பெற்றதா, பாஜகவால் அதிமுக வெற்றி பெற்றதா என்பது ஒரு பெரிய விவாதம். ஆனால், கூட்டணி என வரும் பொழுது எங்களது உதவி இல்லை என்று சொல்ல முடியாது.

எங்களால் மட்டும் தான் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள் என அவர்கள் சொல்ல முடியாது. மக்களவைத் தேர்தலில் நாங்கள் எங்களுடைய வாக்கு வங்கியை செயலால் நிரூபித்து இருக்கிறோம். அந்த எண்ணிக்கையே பதில் சொல்லும். முருகனை எதிர்த்தவர்கள் முருகனுக்கு மாநாடு நடத்த வேண்டி இருக்கிறது. ஒன்றிய அரசு என்று சொன்னவர்கள் மத்திய அரசு என்று சொல்ல வேண்டி இருக்கிறது. யாரெல்லாம் பாஜக, இந்து மத கொள்கைகளை எதிர்த்தார்களோ அவர்கள் எங்களை நோக்கி வர வேண்டிய காலத்தின் கட்டாயம் வந்துவிட்டது என்பதைத்தான் முதல்வரின் ‘மத்திய’ என்ற வார்த்தை காட்டுகிறது.

முருகனை தங்களது ஆளுமைக்குள் திடீரென ஏன் கொண்டு வர வேண்டும்? நாங்கள் தான் முதலில் வேலை (வேல்) எடுத்தோம். முருகனை மிக கீழ்த்தரமாக சிலர் பேசினா். அப்பொழுது நடவடிக்கைகள் எடுக்கவில்லை. முருகனை நிந்தனை செய்தவர்களை தண்டித்தால் மற்றவர்களது ஓட்டை பிடிக்க முடியாதோ என்ற எண்ணத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தீர்கள். ஆனால் இன்று, முருகனையும், ஆன்மிகத்தையும் கையில் எடுக்கவில்லை என்றால் 2026 மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும் என்பதற்காக இதை கையில் எடுத்துள்ளீர்கள்.

பள்ளிக்கல்வித்துறை ஏதாவது ஒரு பிரச்சினை நடந்தவுடன்தான் நடவடிக்கைகள் எடுக்கிறது. போலியாக ஒருவர் என்சிசி கேம்ப் நடத்துகிறார். பாலியல் தொல்லை கொடுத்து குழந்தைகளை துன்புறுத்தி இருக்கின்றார். பள்ளி கல்வித்துறை இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாலியல் சீண்டல் விவகாரங்களில் மிக கவனமாக செயல்பட வேண்டும். எதையெல்லாமோ இலவசமாக கொடுத்துவிட்டு பாட புத்தகத்தின் விலையை உயர்த்தி இருக்கிறது. இது குழந்தைகளின் கல்வியில் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

கோவை மருத்துவ கல்லூரியில்கூட மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வழக்குகளில் குற்றம்சாட்டப்படுபவர்களில் சில பேர் பலியாகி விடுகிறார்கள். எலி மருந்து சாப்பிடுகிறார்கள், விபத்தில் சிக்கி இறக்கின்றனர். இது தொடர்பான உண்மைகள் விசாரிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

x