ஆக.27-ம் தேதி போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை


சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்டபேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் ஆகஸ்ட் 27-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்குமாறு தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 15-வதுஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக தொழிலாளர் துறையின் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, ஆகஸ்ட் 27-ம் தேதி ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என போக்குவரத்து கழக நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பேச்சுவார்த்தைக்கு வருமாறு 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவின் கூட்டுநர் சார்பில் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ‘தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை, மாநகர போக்குவரத்து கழகத்தின் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் ஆகஸ்ட் 27-ம் தேதி காலை 11 மணிக்கு நடக்க உள்ளது. இதில் தொழிற்சங்கம் சார்பாக ஒருபிரதிநிதி பங்கேற்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

x