கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படுகிறதா? - தமிழக அரசு விளக்கம் 


சென்னை: கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளைப் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சமூகநீதியை நிலைநாட்டுவதில் பெரும் அக்கறை கொண்டுள்ள திராவிட மாடல் அரசு நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் 299 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் வழங்கி வருகிறது. மேலும், திறன்மிகு வகுப்பறைகள், இலவச மருத்துவப் பரிசோதனைகள், ஆங்கில வழிக்கல்வி போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், இப்பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறானதாகும். இப்பள்ளிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தனித்துவத்தோடு இயங்கி வரும் சூழ்நிலையில், அவற்றை மேலும் மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

எனவே, இப்பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானதும் மற்றும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x