ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்த உத்தரவு வாபஸ்: உயர் நீதிமன்றம் அதிரடி


சென்னை: ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2006-2011 திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வு பெற்ற காவல் துறை டிஜிபி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011-ம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை 2020- ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

ஜாபா் சேட் தரப்பில், 'எனக்கு எதிரான ஊழல் வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் 2019-ஆம் ஆண்டு ரத்து செய்துள்ள நிலையில், அமலாக்கத் துறை வழக்கை தொடா்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது. என் மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிந்த வழக்கு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், என் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமா்வு, ஜாபா் சேட்டுக்கு எதிரான ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை தொடா்ந்து விசாரிக்க முடியாது எனக் கூறி அவருக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்து ஆகஸ்டு 21ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு தொடர்பாக சில விளக்கங்கள் பெற வேண்டியுள்ளதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

x