விண்ணில் செயற்கைகோள்களை ஏவிய பிறகு  மீண்டும் பூமிக்கு திரும்பும் புதிய ராக்கெட்: 24-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது


சென்னை: செயற்கைக்கோள்களை ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் புதுவகை ராக்கெட்டை ஸ்பேஸ் ஸோன் இந்தியா நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் 3 சிறிய செயற்கைக்கோள்களுடன் 24-ம் தேதி சென்னை அருகே விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் ஸ்பேஸ் ஸோன் இந்தியா நிறுவனம் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதுடன் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களை வடிவமைத்து அவற்றை விண்ணில் செலுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் செயற்கைக்கோள்களை ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ரூமி என்ற மினி ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

மார்ட்டின் குழுமத்தின் நிதியுதவியுடன் பல்வேறு தொழில்நுட்ப நிபுணர்களின் ஒன்றரை ஆண்டுகால உழைப்பில் இது உருவாகியுள்ளது. காலநிலை, காஸ்மிக் கதிர்வீச்சு, புறஊதா கதிர்வீச்சு, காற்றின் தன்மை தொடர்பான தரவுகளை சேகரிக்க உதவும் 3 கியூப் செயற்கைக்கோள்கள் மற்றும் 50 விதமான ஆய்வுசாதனங்களுடன் ரூமி ராக்கெட் வருகிற 24-ம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் காலை 7.45 மணிக்குள் கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மூன்று செயற்கைகோள்களையும் பூமியிலிருந்து அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்திவிட்டு அதில் இணைக்கப்பட்டுள்ள பாராசூட் மூலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வந்துவிடும்.

இந்த புதிய ராக்கெட் திட்டம் தொடர்பான அறிவிப்பை இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, ஸ்பேஸ் ஸோன் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் ஆனந்த் மேகலிங்கம், மார்ட்டின் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆகியோர் சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டனர்.

அப்போது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும்போது, "இன்றைய தினம் விண்வெளி துறையில் அரசுத்துறையோடு தனியாரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். வழக்கமாக செயற்கைக்கோள்களை குறிப்பிட்ட சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியவுடன் ராக்கெட்டின் ஆயுட்காலம் முடிந்துவிடும். ஆனால், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும்வகையில் ராக்கெட் உருவாக்கப்பட்டிருப்பது புதிய முயற்சி" என்று குறிப்பிட்டார்.

ஆனந்த் மேகலிங்கம் கூறுகையில், "நடமாடும் ஏவுதளம் (மொபைல் லாஞ்ச்பேட்) மூலமாகஇந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளோம். 3 செயற்கைக்கோள்களையும் குறிப்பிட்ட தூரத்தில் விண்ணில் செலுத்திய பிறகு அதில் உள்ள பாரசூட் மூலம் அது மீண்டும் பூமிக்கு திரும்பிவந்துவிடும்" என்றார்.

x