புதுச்சேரி அருகே சாலை விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் உயிரிழப்பு


புதுச்சேரி: புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த காங்கிரஸ் பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுச்சேரி - முருங்கப்பாக்கம் குயவர் வீதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (70). காங்கிரஸ் கட்சியின் மாநில பிரச்சார குழு தலைவர். இவர் புதன்கிழமை (ஆக. 21) தனது பைக்கில், அரியாங்குப்பத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் சென்ற போது, நாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க வலது பக்கமாக பைக்கை திருப்பியுள்ளார். அப்போது, அவருக்குப் பின்னால் வந்த ஜீப் பைக் மீது மோதியதில் நிலை குலைந்த அவர் கீழே விழுந்தார். இதில் அருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்த நிலையில், பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசு இறந்த செய்தி அறிந்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு திருநாவுக்கரசின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

x