அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு: ஆக.27-க்கு விசாரணை தள்ளிவைப்பு


சென்னை: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், குற்றச்சாட்டுப் பதிவுக்காக விசாரணையை சென்னை சிறப்பு நீதிமன்றம் ஆக.27-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உள்பட சிலருக்கு திருவான்மியூரில் 3,457 சதுரஅடி மற்றும் 4,763 சதுரஅடி கொண்ட வீட்டுமனைகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக அப்போது வீட்டுவசதித் துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட், அவரது மனைவிபர்வீன், க.முருகையா, கே.ராஜமாணிக்கம், ஆர்.துர்கா, சங்கர் ஆகிய 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 2013-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்களில் சிலரை விடுவித்தும், சிலர் மீதான வழக்கை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு சென்னையில், எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாகநேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் நேரில் ஆஜராகவிலக்கு அளிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்ற நீதிபதி, இந்த வழக்கில் குற்றச் சாட்டுப்பதிவுக்காக விசாரணையை ஆக.27-க்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

x