அவசியமில்லாமல் குண்டர் சட்டம்; இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா? - உயர் நீதிமன்றம் கேள்வி


சென்னை: அவசியமில்லாமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் நபருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்யக்கோரும் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகவும், ஆனால் ஒவ்வொரு வழக்குக்கும் இது மாறுபடும் எனவும் கூறினார்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், அவசியம் இல்லாமல் குண்டர் சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும், தேவையில்லாமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் நபர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா? எனவும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அசன் முகமது ஜின்னா, அவ்வாறு எதுவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டாமென கோரிக்கை விடுத்தார்.

தேவையில்லாமல் குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது என டிஜிபிக்கு தான் கடிதம் எழுதியதாகவும் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் விளக்கம் அளித்தார். மேலும், குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டுமென தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

x