மதுரை -  சென்னை விமானத்தில் தமிழில் ஒலித்த அறிவிப்பு: பயணிகள் வரவேற்பு


சென்னை: மதுரை - சென்னை விமானத்தில் விமானியின் அறிவிப்பு தமிழில் ஒலித்ததை அடுத்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், டெல்லி, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது.

இந்த நிலையில், இன்று மதுரையில் இருந்து சென்னை புறப்பட்ட தனியார் விமானத்தில் கேப்டன் ப்ரியன் விக்னேஷ் என்பவர் பணியில் இருந்தார். அவர், விமானம் புறப்படுவதற்கு முன்பு பயணிகளுக்கு தமிழில் அறிவிப்புகளை செய்தார்.

அதில் விமானம் புறப்படுவதற்கு முன்பு தங்களது இருக்கை பட்டையை அணியுமாறும், இந்த விமானம் மதுரை மாநகர், திருச்சி வழியாக சென்னை சென்றடைய உள்ளது. விமானத்தின் இடது பக்கம் அமர்ந்திருக்கும் பயணிகள் வைகை கரையோர அழகையும், நகரின் மையத்தில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலின் அழகையும் பார்க்க முடியும் என சரளமாக தமிழில் தெரிவித்தார்.

இதனைக் கண்ட விமானத்தில் இருந்த பயணி ஒருவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவு செய்து, மிக்க மகிழ்ச்சி கேப்டன் ப்ரியன் விக்கேனஷ் என தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

x