‘உயிரோடு இருக்கும் என் பெயரில் இறப்பு சான்றிதழ் தயாரித்து மோசடி’ - திருப்பூர் ஆட்சியரிடம் மூதாட்டி புகார்


திருப்பூர்: உயிருடன் இருக்கும் மூதாட்டி பெயரில் இறப்பு சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக கூறி, மூதாட்டி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் இன்று (ஆக. 19) நடந்ததில் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக மனு அளித்தனர்.

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மூதாட்டி மாராத்தாள் (95) அளித்த மனுவில்: "தனக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன். இதில் மகன் கந்தசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனது கணவருக்கு சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் கரடிவாவியில் இருந்தது. அனக்கு இறப்புச் சான்றிதழ் பெற்று, எங்களது உறவினர் அந்த நிலத்தை முறைகேடாக மோசடி செய்து அவர்களது பெயரில் பதிவு செய்துள்ளனர். உயிருடன் வாழ்ந்து வரும் எனக்கு, எப்படி இறப்புச் சான்றிதழை அதிகாரிகள் வழங்கினார்கள்.

இதனால் எனது குழந்தைகளுக்கு சேர வேண்டிய பூர்வீக சொத்தை, மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மூதாட்டி மாராத்தாள் மனுவில் கூறினார்.

x