பிரபல ரவுடி செல்வத்தை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸார் - கன்னியாகுமரியில் பரபரப்பு!


கன்னியாகுமரி: பிரபல ரவுடி செல்வத்தை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற தூத்துக்குடி செல்வம். இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் உள்ளன. இவர் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, போலீஸார் இவரை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த சூழலில் அஞ்சுகிராமம் பகுதியில் இவர் மறைந்து இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அஞ்சுகிராமம் காவல் உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது ரவுடி செல்வத்தை பிடிக்க முயன்ற போது அவர் காவல் உதவி ஆய்வாளரை கையில் வெட்டினார்.

இதனையடுத்து போலீஸார் தற்காப்புக்காக செல்வத்தை துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். தொடர்ந்து ரவுடி செல்வம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x