கேளிக்கை விடுதியில் நடனமாடியபோது கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு


சென்னை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புருஷோத்தமன் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது சுகைல் (22). இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். இதற்காக அந்த கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் சுகைல், நேற்று முன்தினம் இரவு தனது தோழிகள் சிலருடன் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கேளிக்கை விடுதிக்கு சென்றார். அங்கு அவர், தோழிகளுடன் உற்சாகமாக நடனமாடியுள்ளார். அப்போது அவர் திடீரென நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார்.

இதைப் பார்த்த கேளிக்கை விடுதி ஊழியர்கள், சுகைலை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் முகம்மது சுகைல் இறந்தார். நுங்கம்பாக்கம் போலீஸார் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

x