எண்ணூர் தனியார் உர ஆலையை திறக்க நிபந்தனைகள் விதிப்பு: அமோனியா வாயு கசிவு வழக்கில் பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு


சென்னை: சென்னை எண்ணூரில் அமோனிய வாயு கசிந்து பாதிப்பு ஏற்பட்டது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரம் மற்றும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் தடையில்லா சான்று பெற்றபிறகே தனியார் உர ஆலையைத் திறக்க வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நேற்று தீர்ப்பளித்தது.

சென்னை எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் தனியார் உரத் தொழிற்சாலை அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நள்ளிரவு இந்த தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது.

மக்கள் பாதிப்பு: இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து உள்ளூர் மக்களே சக மக்களுக்கு தகவல் தெரிவித்து கிராமத்தை விட்டு அவர்களை வெளியேற்றினர். வாயு கசிவால் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது

தாமாக முன்வந்து வழக்கு: அதனால், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கு விசாரணையின்போது, மீனவர்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தனியார் உரத் தொழிற்சாலை நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களுடைய வாதங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்திய கோபால் ஆகியோர் கொண்ட அமர்வு இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரம் மற்றும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் தடையில்லா சான்று பெற்ற பிறகே தனியார் உர ஆலையைத் திறக்க வேண்டும்.

உர ஆலைக்கு உத்தரவு: ஆலை நிறுவனம் சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ரூ.5.92 கோடி நிவாரணத் தொகையை சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பயன்படுத்த வேண்டும். விசாரணையின்போது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்த விதிமுறைகள் அனைத்தையும் உர ஆலை நிர்வாகம் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு தென் மண்டல பசுமை தீர்ப்பாய அமர்வு அந்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.