சிவ்தாஸ் மீனாவுக்கு புதிய பதவி: அடுத்த தலைமைச் செயலாளர் முருகானந்தம்?


சென்னை: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக, தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமானது, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு சட்டம், 2016-ன் கீழ் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்துவதற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் தொழில்துறையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும் நிறுவப்பட்டது. வீடு வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், ரியல் எஸ்டேட் துறையின் ஒழுங்கான வளர்ச்சியை உறுதி செய்வதிலும் இந்த ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கட்டிடங்கள், மனைப்பிரிவு திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த ஆணையம் தொடங்கப்பட்ட நிலையில், முதல் தலைவராக 2019-ம் ஆண்டு பிப்.8-ம் தேதி முன்னாள் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு பிப். 10-ம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, கடந்த ஜூலை மாதம் தனது பரிந்துரையை அளித்தது. அந்த பரிந்துரைகளை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, ஆளுநரின் ஒப்புதலை பெற்று, தற்போது தலைமைச்செயலராக உள்ள சிவ்தாஸ் மீனாவை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1989-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தானை சேர்ந்தவர். இவர் கடந்தாண்டு ஜூன் மாதம் தமிழக தலைமைச்செயலராக நியமிக்கப்பட்டார். இவர் வரும் அக்டோபர் மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1989-ல் காஞ்சிபுரம் துணை ஆட்சியராக பணியைத் தொடங்கிய சிவ்தாஸ் மீனா, கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசு பணிக்கு சென்றார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும், தமிழக பணிக்கு அழைத்து வரப்பட்டார். இங்கு நகராட்சி நிர்வாகத்துறை செயலராக இருந்த நிலையில், புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனாவுக்கு தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலராக முதல்வரின் செயலராக உள்ள 1991-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான நா.முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

x