ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்


அரூர்: ஒகேனக்கல் அருகேயுள்ள ராசிமணல் பகுதியில் தமிழக அரசு அணை கட்ட வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே நேற்று நடைபெற்ற, பழங்குடியின மகளிர் விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகில் உள்ள ராசிமணல் பகுதியில் காவிரி ஆற்றில் அணைகட்ட வேண்டும் என நீண்டகாலமாக போராடி வருகிறோம்.

மேகேதாட்டுவில் அணை கட்டினால் கர்நாடகாவில் வனம், குடியிருப்புகள், விவசாயம் அழியும் என்று அங்குள்ளவர்களே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எனவே, ராசிமணல் பகுதியில் அணை கட்டினால் விவசாயிகள் பயனடைவர். அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து குழு அமைத்து, மலைப்பகுதி விவசாயிகளின் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

x