ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான தேர்வுகள்: காலியிடங்கள் குறைப்பால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் அதிர்ச்சி


சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி 13-ம்தேதி வெளியிட்டது. இதில் உதவி வேதியியலர், உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து), திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 861 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்.11-ல் முடிவடைகிறது.

இந்நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வில் (டிப்ளமா, ஐடிஐ கல்வித் தகுதி) காலியிடங்களின் எண்ணிக்கை 730 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எண்ணிக்கை குறைக்கப்பட்ட பதவிகளின் விவரம் குறிப்பிடப்படவில்லை.

அதேபோல், கடந்த ஜூலை 26-ம் தேதி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகள் தேர்வுக்கான (பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு கல்வித்தகுதி) அறிவிப்பில் 654காலியிடங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த காலியிடங்களின் எண்ணிக்கை 605 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகிற 24-ம் தேதி முடிவடைகிறது.

இரு தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வுகளிலும் காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாக காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே வழக்கம். ஆனால், அதற்கு நேர்மாறாகதற்போது காலியிடங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

இதற்கிடையே, திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையில் புதிதாக, 50 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு (பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு கல்வித் தகுதியுடன் நேர்காணல் உள்ள பதவிகள்) ஆக.30-ம் தேதி வெளியிடப்பட்டு அதற்கான போட்டித் தேர்வு நவம்பர் 18-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், என்னென்ன பதவிகள் என்ற விவரம் அதில் குறிப்பிடப்படவில்லை. எனினும், ஏற்கெனவே வெளியிடப்பட்ட வருடாந்திர தேர்வுஅட்டவணையில் இடம்பெற்று பின்னர் நீக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலர் உள்ளிட்ட தேர்வுகள் புதிய அறிவிப்பில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

x