“ஒலிம்பிக் வீராங்கனை போன்றவர் குஷ்பு...” - கார்த்தி சிதம்பரம் கலாய்ப்பு


திருப்புவனம்: ‘ஒலிம்பிக் வீராங்கனை போன்றவர் குஷ்பு. அவர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சி தாவுவார்’ என கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் மாரநாட்டில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சென்னையில் கார் பந்தயம் நடத்துவதில் தவறில்லை. இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தினால் தான் வெளிநாடுகளில் நமது ஊர் பிரபலம் அடையும். நாங்கள் ஏற்கெனவே அங்கு டென்னிஸ் நடத்திய போது பிரபலமானது.

குஷ்பு ஒலிம்பிக் வீராங்கனையை போன்றவர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சி தாவுவார். ஆளுநர் தேநீர் விருந்துக்கு திமுக கட்சியாக போகவில்லை. தமிழக அரசாகத்தான் சென்றனர். விஜய் கட்சி ஆரம்பிப்பதாகத் தான் கூறியுள்ளார்.

பொது விஷயங்கள் பற்றி அவரது நிலைப்பாடு என்னவென்றே தெரியவில்லை. நிலைப்பாட்டை கூறினால் தான் கட்சி நிலைக்குமா என்று கூற முடியும். ரயில்வே திட்டங்களில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. தமிழகத்தில் உள்ள ரயில்வே அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

முழுமையாக ரயில்வே வாரியத்திடம் தான் அதிகாரம் உள்ளது. திருச்சி, மதுரை போன்ற கோட்ட அளவில் நடைபெறும் கூட்டங்களில் வாரிய உறுப்பினர்கள் பங்கேற்பதில்லை.

இந்தக் கூட்டங்கள் சம்பிரதாயத்துக்கே நடக்கின் றன. நான் 35 கோரிக்கைகளை கொடுத்துள்ளேன். எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த ஆட்சியில் இருந்த ரயில்வே அமைச்சரே இருப்பதால், எந்த மாற்றமும் நிகழாது” என்று கூறினார்.

x