மருத்துவ மாணவி படுகொலை: பாஜகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி


சென்னை: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கண்டித்தும் ஆக.16-ம் தேதி தமிழகம் முழுவதும் 66 இடங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

ஆனால், மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் செல்வதற்கு தமிழக காவல் துறை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, அந்தந்த மாவட்ட பாஜக அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் கோடம்பாக்கம் அஜீஸ் நகரில் மாநில செயலாளர் பிரமிளா சம்பத் தலைமையில் பெண் நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். நுங்கம்பாக்கத்தில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னையில் 6 இடங்களில் பாஜக பெண் நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

x