சமூக ஒற்றுமை ஏற்பட்டால் தமிழகத்தில் பட்டியலினத்தவர் முதல்வராவார்: ராமதாஸ் உறுதி


சென்னை: விழிப்புணர்வும், சமூக ஒற்றுமையும் ஏற்பட்டால் தமிழகத்தின் முதல்வராக பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் எந்த சூழலிலும், எந்தக் காலத்திலும் தலித் ஒருவர் முதல்வராக முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதும், அதற்கு பதிலளிக்கும் வகையில் பட்டியலின மக்கள் ஆதரவளித்தால், பாமக சார்பில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக ஆக்கப்படுவார் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியிருப்பதும், தமிழக அரசியலில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சமூகநீதி சார்ந்து இத்தகைய விவாதங்கள் எழுவது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகவே முடியாது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறுமேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு பட்டியலின மக்களிடமிருந்தே போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.

பட்டியலினத்தவரும், வன்னியர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. இரு சமுதாயங்களும் இணைந்தால் தான் இரு சமூகங்களுமே வளர முடியும் என்பது தான் எனது அசைக்க முடியாத நிலைப்பாடு. பாமக வெற்றி பெற்றால் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக்கப்படுவார் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தேன். 25 ஆண்டுகளுக்கு முன்பே பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை, பாமகவுக்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியில் அமர வைத்து அழகு பார்த்தேன். தமிழகத்தில் 57 ஆண்டு திராவிட ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த எவராவது துணை முதல்வராக முடிந்திருக்கிறதா, அதிகாரம் மிக்க அமைச்சர் பொறுப்புகளுக்கு வர முடிந்ததா?

பட்டியலினத்தவர் தமிழகத்தின் முதல்வராவது சாத்தியமற்றது அல்ல. நம்மால் முடியாது என்று சதிவலையில் மயங்கி கிடப்பதை விடுத்து, நம்மால் முடியும் என என்று பட்டியலினத்தவர் நினைக்க வேண்டும்.

நாம் எழுச்சி பெற வேண்டும்என்று நினைக்கும் சக்திகளைஅடையாளம் கண்டு ஆதரிக்கவேண்டும். இந்த விழிப்புணர்வும்,சமூக ஒற்றுமையும் ஏற்பட்டால் தமிழகத்தின் முதல்வராக பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அந்த மாற்றம் நிகழும் நாள் தான் தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக அமையும்

x