75,000க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு!


ஜனவரி 2026க்குள் 75,000க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பப்படும், முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி, இயற்கை இடர்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைப்பு, குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க முதல்வர் மருந்தகம் உள்ளிட்ட அறிவிப்புகளை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இன்று நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பேசிய அவர்,

“ஏழை எளிய நடுத்தர மக்களின் தேவையை உணர்ந்து அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசாக விளங்கி வருகிறது. நான் தொடர்ந்து மேற்கொண்டு வரும் களஆய்வுகள் மற்றும் மக்களிடம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் திராவிட மாடல் அரசு சார்பாக இந்த வீர விடுதலை திருநாளில் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளியோருக்கு சிறப்பான சிகிச்சைகளும் தரமான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தர குடும்பங்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டி உள்ளதால் இவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் இவர்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்.

வரும் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்த உள்ள இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்த திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு ரூ.3 லட்சம் மானியமாக அரசால் வழங்கப்படும். 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000 மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ படைவீரர்களின் வாழ்வை மேம்படுத்த முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.

மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரம் என்பது ரூ.21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தற்போது வழங்கி வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், விஜய ரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள் பெற்று வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியமான ரூ.10,000 என்பது இனி ரூ.10,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

நீலகிரி மற்றும் வால்பாறை மலைப்பகுதி கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் ஏற்காடு மற்றும் ஏலகிரியை உள்ளடக்கிய மலைப்பகுதிகள் என மலை பகுதிகள் அதிகம் உள்ள இடங்களில் பெருமழை காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

வனத்துறை, புவிசார் அறிவியல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்துறை வல்லுநர்கள் கொண்ட ஒரு குழுவால், அறிவியல் அடிப்படையிலான ஒரு விரிவான ஆய்வு மாநில பேரிடர் மேலாண்மை துறையின் மூலமாக இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும். மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இடர்பாடுகளை முன்னதாக அறிவதற்கும், தவிர்ப்பதற்கும், தணிப்பதற்கும், நீண்டகால அடிப்படையில் ஆபத்துகளை குறைப்பதற்கும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை வழங்கும். அந்த பரிந்துரைகளின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்று கூறினார்.

x