காகிதம், அச்சுக்கூலி உள்ளிட்ட தயாரிப்பு செலவை ஈடுகட்டவே பள்ளி பாடபுத்தகங்கள் விலை அதிகரிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்


சென்னை: அட்டை, காகிதம் விலை, அச்சுக்கூலி உயர்வு காரணமாக, தயாரிப்பு செலவை ஈடுகட்டுவதற்காகவே பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. லாப நோக்கம் காரணம் அல்ல என்று அமைச்சர்அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையான பாடப் புத்தகங்கள் தமிழ்நாடுபாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் மற்றும் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி, ஆண்டுக்கு சுமார் 7 கோடி புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் பாடப் புத்தகங்களின் விலையை 30 முதல் 50 சதவீதம்வரை பாடநூல் கழகம் உயர்த்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள், தனியார் பள்ளிகள், பெற்றோர், போட்டித் தேர்வர்கள் என பல்வேறுதரப்பிலும் கடும் கண்டனம் எழுந் துள்ளது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும்அரசு உதவி பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு நியாயமான விலையிலும் பாட நூல்கள் வழங்கப்படுகின்றன.

முந்தைய ஆட்சிக் காலத்தில் 2015-16-ம் கல்வி ஆண்டில் அதிகபட்சமாக 370 சதவீதமும், 2018–19-ம் ஆண்டில் அதிகபட்சமாக 466 சதவீதமும் பாடநூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, 11-ம் வகுப்பு புவியியல் பாடப் புத்தகம் 466 சதவீதம், வணிகவியல் புத்தகம் 325 சதவீதம், அரசியல் அறிவியல் புத்தகம் 300 சதவீதம் என விலை ஏற்றப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக 2013–14-ம் கல்விஆண்டிலும் பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, காகிதம், மேல் அட்டை,அச்சுக்கூலி ஆகியவற்றை கணக்கில் கொண்டு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடப் புத்தகத்தின் விலை உயர்த்தப்படுவது வழக்கமான நடைமுறைதான்.

ஒவ்வொரு ஆண்டும் பாடப் புத்தகங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களான காகிதம், மேல் அட்டைகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. 2018-ல் இருந்ததைவிட காகிதம் 63 சதவீதம், மேல் அட்டை 33 சதவீதமும், அச்சுக்கூலி 21 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

அந்தவிலையேற்றத்தை ஈடுகட்டும் வகையிலேயே பள்ளி பாடநூல்களின் விலை 6 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. லாப நோக்கத்துக்காக இந்தவிலை உயர்வு மேற்கொள்ளப்பட வில்லை.

அதேநேரம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எளிய குடும்பத்தை சார்ந்த மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், மாவட்ட நூலகங்கள், அறிவுசார் மையங்களுக்கு தேவையான அளவு பள்ளி பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன. எப்போதுமே மாணவர்களின் நலனை முன்வைத்தே இந்த அரசு செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x