அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தந்ததற்காக வணிகவரி அலுவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம்: அமைச்சர் மூர்த்தி பாராட்டு


சென்னை: வணிகவரி வரி பகுத்தாய்வுப் பிரிவில் சிறப்பாக பணியாற்றி அரசுக்குகூடுதல் வருவாய் ஈட்டித்தந்த 2 அலுவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம்ஊக்கத் தொகையை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று வழங்கினார்.

இதுகுறித்து வணிகவரித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் வணிகவரி இணைஆணையர்களுடனான மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின்போது வணிகவரித் துறை வரி பகுத்தாய்வுப் பிரிவில் சிறப்பாக பணியாற்றி அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தந்த உதவி ஆணையர் ராம்குமார் மற்றும் மாநில வரி அலுவலர் முஹம்மது இர்ஃபான் ஆகியோருக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

பயிற்சி வகுப்பு ஆய்வு: மேலும் நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி வளாகத்தில் உள்ள வணிகவரிப் பணியாளர் பயிற்சி நிலையத்தில், துறைசார்ந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுள்ள டிஎன்பிஎஸ்சி மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 24 வணிகவரி உதவி ஆணையர்கள் மற்றும் ஆந்திராவைச் சார்ந்த ஆறுஉதவி ஆணையர்களை அமைச்சர் மூர்த்தி சந்தித்து, பயிற்சி விவரங்களை கேட்டறிந்து, நல்ல முறையில் பயிற்சி பெற்று, சிறப்பாக பணியாற்றுமாறு அறிவுரை வழங்கினார்.

மேலும் அனைத்து இணை ஆணையர்களும் தங்கள் கோட்டங்களை சார்ந்த பகுதிகளில் அடிக்கடிஆய்வு செய்து, போலி பில் தயாரித்து வணிகம் செய்யும் நிறுவனங்களை கண்டறிய வேண்டும். ரூ.40லட்சத்துக்கு மேல் தொழில் செய்வோர் விவரங்களை கண்டறிந்து ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். தொடர்ந்து அரசுக்குவருவாய் இழப்பு ஏற்படுத்தும் நிறுவனங்களின் பதிவை ரத்துசெய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும்என்பது உள்ளிட்ட பணிகளைதொடர்ந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் அப்போது அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கூட்டத்தில் வணிகவரி மற்றும்பதிவுத்துறை செயலர் பிரஜேந்திரநவ்நீத், வணிகவரித் துறை ஆணையர் டி.ஜகந்நாதன், இணைஆணையர் துர்காமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

x