டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்


எஸ்.கே.பிரபாகர் | கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக, ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசின் பரிந்துரைப்படி, டிஎன்பிஎஸ்சியில் ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் ஆகியோர் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். தற்போது 9 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதன் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் கடந்த 2022-ம் ஆண்டு பணிமூப்பால் ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2022 ஜூன் 10-ம் தேதிமுதல், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி.முனியநாதன் பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.கே.பிரபாகரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் பதவியேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை இப்பதவியில் இருப்பார் என்று தமிழக மனிதவள மேலாண்மை துறை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 1966-ம் ஆண்டு பிறந்த எஸ்.கே.பிரபாகர், டெல்லி ஐஐடியில் எம்.டெக். முடித்தவர். 1989-ல்நேரடி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகி, தமிழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியின்போது, அவரது செயலாளராக பணியாற்றினார். தகவல் தொழில்நுட்பம், வணிகவரி, பொதுப்பணி உள்ளிட்ட துறைகளின் செயலராக பணியாற்றியுள்ளார். 2019-ல் கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.

கடந்த 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், முதல்வர் ஸ்டாலின் இவரை உள்துறை செயலராக நியமித்தார். பின்னர், வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார். ஓய்வுபெற 17 மாதங்கள் உள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

x