ஸ்ரீவைகுண்டத்தில் கூட்டுறவு சங்க மேலாளர் தீ விபத்தில் உயிரிழப்பு


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் நேரிட்ட தீ விபத்தில் சங்க மேலாளர் உயிரிழந்தார்.

ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(52). இவர் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.இவருக்கு மனைவி ஜெயா மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று மதியம் கூட்டுறவு சங்கத்தில் ஸ்ரீதரன் மட்டும்பணியில் இருந்துள்ளார். ஊழியர்கள் அறிவுச்செல்வி, பத்திரகாளி ஆகியோர் மதிய உணவு சாப்பிடச் சென்றுள்ளனர். இந்நிலையில், மதியம் ஒரு மணி அளவில் ஸ்ரீதரன்தனது மனைவிக்கு போன் செய்து, தனக்கு மயக்கம் வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் பதறிய ஜெயா, சங்கப் பணியாளர் ஒருவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வங்கியில் இருந்து திடீரென புகைமூட்டம் எழுந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் சங்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஸ்ரீதரன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை வெளியே தூக்கி வந்து, 108 ஆம்புலன்ஸ்க்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வந்து சோதனை செய்தபோது, ஸ்ரீதரன் ஏற்கெனவே இறந்துவிட்டதுதெரியவந்தது. தகவலறிந்து வந்தபோலீஸார் அவரது உடலை, பிரேதப் பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். சங்கத்தில் இருந்த இன்வெர்ட்டர் பேட்டரி வெடித்து தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், தீ விபத்து நேரிட்ட இடத்தில் இருந்துபெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டியை போலீஸார் கைப்பற்றினர். எனவே, ஸ்ரீதரன் உயிரிழப்புக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

x