மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45,500 கனஅடியாக அதிகரிப்பு: காவிரியில் 30,000 கனஅடி நீர் வெளியேற்றம்


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர்.

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 45,500 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், காவிரி ஆற்றில் 30,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

இதற்கிடையில், அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் கடந்த 7-ம் தேதி 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. டெல்டா பாசனத்துக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

கர்நாடகாவில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவை நேற்று முன்தினம் இரவு எட்டியது. தற்போது அணையின் 16 கண்மதகுகள் வழியாக விநாடிக்கு 8,500 கனஅடி, சுரங்க மின் நிலையம் வழியாக 21,500 கனஅடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 26,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 45,500 கனஅடியாக அதிகரித்தது.அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து120.41 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டிஎம்சியில் இருந்து 94.12 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது.

அணையின் 16 கண் மதகு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள கட்டுப்பாட்டு மையத்தில் நீர்வளத் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் நீர்வரத்து, நீர் வெளியேற்றத்தை கண்காணித்து வருகின்றனர். உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரிக் கரையோர பகுதி மக்களுக்கான வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. மேலும், வருவாய் துறையினர் கரையோரப் பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லில்... தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக இருந்தநீர்வரத்து மாலையில் 45 ஆயிரம்கனஅடியாக அதிகரித்தது. ஆனால், நேற்று காலை விநாடிக்கு42 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் 25 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து சரிந்தது.

x