தமிழகத்தில் கீரைகள், காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்


சென்னை: “தமிழகத்தில் கீரைகள் மற்றும் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

சென்னை சேப்பாக்கம், தோட்டக்கலைத்துறை இயக்குனரகத்தில், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில், தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பு குறித்த மாவட்ட வாரியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் பேசியதாவது: “இடம் சார்ந்த விவசாயம் மேற்கொள்ள வேண்டும். அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில் காய்கறி வரத்தை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட வேண்டும்.

தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை விரிவுபடுத்த அனைத்து அலுவலர்களும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கீரைகள் மற்றும் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும். தோட்டக்கலைத் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து தோட்டக்கலைப் பண்ணைகளின் உற்பத்தியை அதிகரிப்பதுடன், புதிய ரக பழச் செடிகளை நடவு செய்ய வேண்டும்.

நடப்பாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழைப்பொழிவு இருப்பதால் அனைத்துத் தோட்டக்கலைத் திட்டங்களுக்கான பழச்செடிகளையும் உடனடியாக விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும். கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும். பருவமழை காலங்களிலும், பருவமற்ற காலங்களிலும் பெய்யும் மழை பொழிவால் ஏற்படும் சேதங்களை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விவசாயிகளை நேரில் சந்தித்து உரிய ஆலோசனை வழங்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். கூட்டத்தில் வேளாண்துறை செயலர் அபூர்வா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், வேளாண்துறை இயக்குநர் பா.முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x