சேலையூரில் அம்மன் சிலையை கண்டுபிடிப்பதில் போலீஸ் மெத்தனம்: கருப்பு கொடியேற்ற ஊர்மக்கள் முடிவு


சேலையூர்: தாம்பரம் அடுத்த அகரம் தென் ஊராட்சியில், கஸ்பாபுரம் பகுதியில் கோலாட்சி அம்மன் திருக்கோயிலிருந்தது. இந்தக் கோயிலில் உள்ள அம்மனை அந்தக் கிராமத்து சார்ந்த குறிப்பிட்ட 3 சமூகத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் கிராம மக்கள் வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த கோயிலில் திருப்பணி நடைபெற்றது. அப்போது, மற்ற சமூகத்தினர் ஏன் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் கோயில் திருப்பணி மேற்கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பியபோது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது எங்கள் மூதாதையர் உங்களுக்குச் சம்பந்தம் இல்லை எனக் கூறி வழிபட அனுமதி மறுத்துவிட்டனர். இதனையடுத்து கிராமத்தின் இரு குறிப்பிட்ட சமூகத்தினர் சேர்ந்து கோலாச்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்திலிருந்த வேப்ப மரத்தடியில் கோலாட்சி அம்மன் என பெயர் சூட்டி கற்சிலையை வைத்துக் கடந்த ஏழாம் தேதி முதல் பூஜை செய்து வந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்குப் பூஜை செய்துவிட்டு சனிக்கிழமை காலை மீண்டும் 6 மணிக்குப் பூஜை செய்யப் பூசாரி மனோகர் வந்தார். அப்போது சாமி சிலை திருடப்பட்டு இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இதனால் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டு பொதுமக்கள் அங்குக் குவிந்தனர். மேலும் சேலையூர் போலீஸார் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிலையை அருகிலுள்ள 40 அடி கிணற்றில் கொண்டு சென்று போட்டு இருக்கலாம் என சில தடயங்களை வைத்து சந்தேகித்த அப்பகுதி பொதுமக்கள் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்ற நிலையில் அதில் சிலை இல்லாதது தெரியவந்தது.

காணாமல் போன கற்சிலை

சிலை மாயமானது குறித்து ஊர் மக்கள் அளித்த புகாரில் குறிப்பிட்டு இருந்த நபர்களை சேலையூர் போலீஸார் இதுவரை அழைத்து விசாரிக்காததால் போலீஸார் மற்றும் இந்து அறநிலையத் துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக ஊர் மக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், தேசிய கொடியுடன் கருப்பு கொடியை வீடுகளுக்கு முன்பு ஏற்றி வைக்க கஸ்பாபுரம் ஊர்மக்கள் முடிவு எடுத்துள்ளனர்.

இது குறித்து சேலையூர் போலீஸாருக்கு தகவல் தெரியவந்துள்ள நிலையில் ஊர்மக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் ஊர்மக்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. நாளை பேச்சு வார்த்தைக்கு செல்ல வாய்ப்புகள் இருப்பதாக ஊர் மக்கள் சார்பில் கூறப்படுகிறது.

x