கடலூரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீஸார் விசாரணை


சிவக்குமார்.

கடலூர்: கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே வீட்டிற்குள் பாதி எரிந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கொத்தவாச்சேரி கிழக்குத் தெருவை சேர்ந்த கல்வராயன் மகன் சிவகுமார்( 45). இவர் திருமணம் ஆகாமல் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சிவகுமாரை காணவில்லை என்பதால் அவரது அண்ணன் அரிகிருஷ்ணனும், உறவினர்கள் மற்றும் நண்பர்களும் சிவகுமாரைத் தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் அவரைக் காணவில்லை.

இந்த நிலையில், இன்று காலை அவர் வசித்த வீட்டிற்கு சென்று, கதவைத் திறந்து பார்த்த போது சிவகுமார் உடல் எரிந்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அண்ணன் அரிகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் இது குறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக அங்கு சென்ற போலீஸார் சிவகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சிவகுமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

பாதி எரிந்து அழுகிய நிலையில் வீட்டினுள் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x