முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக சி.வி.சண்முகம் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து


சென்னை: தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2022-ம் ஆண்டு திண்டிவனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய ராஜ்யசபா எம்.பி.யுமான சி.வி.சண்முகம், தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக திமுக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின்பேரில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் சி.வி.சண்முகம் மீது திண்டிவனம் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் தரப்பி்ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், சி.வி.சண்முகத்தின் பேச்சால் சட்டம் ஒழுங்குக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றால் அதற்காக அரசு தரப்பில்தான் புகார் அளித்திருக்க வேண்டும்.

ஆனால் இதுதொடர்பாக திமுக நிர்வாகி ஒருவர் அரசியல் உள்நோக்கத்துடன் அளித்துள்ள புகாரின்பேரில் சி.வி.சண்முகம் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என வாதிட்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரரின் பேச்சு மோசமானது தான். அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த பேச்சு காரணமாக மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதி்க்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், மனுதாரரின் பேச்சு இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி அதன்மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்பதாலேயே இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என வாதிட்டிருந்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் நேற்று இந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக சி.வி.சண்முகம் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவி்ட்டுள்ளார்.

x