சிவகாசியில் ஆகஸ்ட் 17ல் பட்டாசு வர்த்தக கண்காட்சி!


சிவகாசி: ஆகஸ்ட் 17-ம் தேதி தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் சிவகாசியில் நடைபெறும் பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாட்டில் முதன் முறையாக பட்டாசு வர்த்தக கண்காட்சி இடம் பெற உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜா சந்திரசேகர், பொதுச்செயலார் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமி ராஜன் ஆகியோர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''சிவகாசி - திருத்தங்கல் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் 4-வது பாதுகாப்பு விழிப்புணர்வு மாநில மாநாடு ஆகஸ்ட் 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 17-ம் தேதி மாலை சிவகாசியில் முதல் முறையாக பட்டாசு வர்த்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

அதன்பின் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டமும், தீயணைப்புத் துறை சார்பில் தீ பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு செயல் விளக்க நிகழ்வும் நடைபெறுகிறது. 18-ம் தேதி மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

x