அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் தீர்ப்பு


சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கினை ரத்து என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக அரசின் திட்டம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது உள்ளிட்ட விவகாரத்தில் தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து அவதூறாக பேசியதாக திமுக நிர்வாகி ஒருவர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது போலீஸில் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் சி.வி.சண்முகம் மீது திண்டிவனம் போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்பியுமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, “முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகத்தின் பேச்சு காரணமாக சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் இந்த புகார் திமுக நிர்வாகியால் அளிக்கப்பட்டுள்ளது” என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “மனுதாரரின் பேச்சு மோசமானது தான். அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அதற்காக இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியுமா?” என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு ரத்து என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

x