ஆளுநருடன் ஆலோசனை நடத்தி துணைவேந்தர் பதவிகளை முதல்வர் நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை, ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் கலந்தாலோசித்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 3 ஆண்டு திமுக ஆட்சியில், உயர் கல்வி மற்றும் தொழில் கல்விக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் எல்லாம் நிதி நெருக்கடிக்கு ஆளாகி, போதிய ஆசிரியர்களை நியமிக்க முடியாமல், ஆசிரியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாமல், தேர்வுகளைக்கூட உரிய நேரத்தில் நடத்த முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளன.

தமிழகத்தில் தற்போது சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான துணை வேந்தர்கள் பல மாதங்களாக நியமிக்கப்படவில்லை. தேடுதல் குழுவில் பல்லைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி நியமிப்பது தொடர்பான பிரச்சினை இருப்பதால், துணை வேந்தர்கள் நியமனம் காலதாமதமாகிக் கொண்டே வருகிறது.

துணை வேந்தர்கள் இல்லாத இந்தச் சூழலில், உயர் கல்வித் துறை செயலர் தலைமையிலான 3 நபர் குழு மேற்படி பல்கலைக்கழகங்களை நடத்தி வருகிறது. தற்போது இந்தப் பல்கலைக்கழகங்களின் வரிசையில் அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்துள்ளது. இது தவிர, பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பணி நீட்டிப்பில் உள்ளனர்.

இது பல்கலைக்கழகங்களின் முன்னேற்றத்தையும், கல்வித் தரத்தையும் கடுமையாக பாதிக்கும். எனவே, ஆண்டு கணக்கில் துணை வேந்தர்களை நியமிக்காமல் இருப்பது என்பது உயர் கல்வியை பின்னுக்குத் தள்ளும் செயலாகும்.

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி இடம் பெறுவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என அறிகிறேன். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து முடிக்கவும், மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், ஆளுநருடன் கலந்து பேசி தற்போது காலியாக உள்ள துணை வேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்ப முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

x