அரசு ஊழியர் ஓய்வு வயது 62 ஆக உயர்வா? - வதந்தி என தமிழக அரசு மறுப்பு


சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாவும், 15 நாட்களில் அரசாணை வெளியிடப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வெளியான தகவலை வதந்தி என தமிழக அரசு மறுத்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2021-ம் ஆண்டு நிதி நெருக்கடியை காரணம் காட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒய்வு வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. அப்போதே, இளைஞர்கள் அரசுப்பணியில் சேருவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாக, பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலி்ல் திமுக வெற்றி பெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. ஆனால், ஒய்வு வயது குறைக்கப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆகவே உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நிதி நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, 60-லிருந்து 62 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. மேலும், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 15 நாட்களில் அரசாணை வெளியிடப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் இத்தகவல் அடிப்படையில், கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்,‘‘ இவ்வாறு வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தியே. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x