கத்தாரில் கைதான இந்திய கடற்படை வீரர்கள் 8 பேர் விடுதலை: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்


சென்னை: இந்திய கடற்படையில் பணியாற்றிய 8 முன்னாள் வீரர்கள், தனியார் நிறுவனம் சார்பில் கத்தார் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு போர் பயிற்சி அளித்து வந்தனர். அப்போது, கத்தார் நாட்டின் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக கூறி, கேப்டன்கள் நவ்தேஜ் சிங் கில், சுரபா வாஷிஸ்,வீரேந்திர குமார் வர்மா, கமாண்டர்கள் புரனேடு திவாரி, சுகன்கர் பகலா, சஞ்சீவ் குப்தா, அமித் நாக்பால், மாலுமி ராஜேஷ் ஆகிய 8 பேரையும் கத்தார் நாட்டின் தேசிய பாதுகாப்பு படை கடந்த 2022-ம் ஆண்டு கைது செய்தது. 8 பேருக்கும் அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்தது.

இந்திய வெளியுறவு துறை அந்நாட்டு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், அவர்கள் 8 பேரின் நிலை குறித்து தெரிவிக்குமாறும், அவர்களது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மத்திய அரசு மற்றும் கத்தார் நாட்டு தூதரகத்துக்கும் மனு அளித்தும் பதில் இல்லை என்று கூறி செங்குன்றத்தை சேர்ந்த நந்தகோபாலன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் தெரிவித்ததாவது: இந்திய கடற்படை வீரர்கள் 8பேரையும் கத்தார் அரசு விடுதலை செய்துவிட்டது. அதில் 7 பேர் இந்தியா திரும்ப உள்ளனர். ஒருவர்மட்டும் கத்தாரிலேயே தொடர்ந்து தங்க உள்ளார். இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, 8 பேரையும் விடுதலை செய்த கத்தார் நாட்டு அரசுக்கு மத்திய அரசு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

x