பணியிடை நீக்கம், பணியிட மாற்றத்தை எதிர்த்த மருத்துவர் சுப்பையாவின் மனுக்கள் தள்ளுபடி


சென்னை: பணியிடை நீக்கம் மற்றும் பணியிட மாற்றத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறைத் தலைவராக பணிபுரிந்த மருத்துவர் சுப்பையா சண்முகத்துக்கு எதிராக பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் மருத்துவர் சுப்பையா, காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

இந்த உத்தரவுகளை எதிர்த்து மருத்துவர் சுப்பையா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக ஏற்கெனவே நடந்து வந்தது.

அப்போது சுப்பையா தரப்பில், “செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் யாரோ ரகசிய கேமரா வைத்து படம் பிடித்துள்ளனர். இதுதொடர்பாக சுப்பையா போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது மருத்துவர் சுப்பையா கிடையாது. அவருக்கு எதிரான புகாரின் மீது நடத்தப்பட்ட விசாகா குழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “குற்றம்சாட்டப்பட்டுள்ள சுப்பையாவுக்கு எதிராக இதுபோன்ற பாலியல் புகார்கள் தொடர்ச்சியாக வந்துள்ளன. இவரைப் போன்ற நபர்களுக்கு நீதிமன்றம் கருணைக் காட்டக்கூடாது. பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே சுப்பையா இடமாற்றம் செய்யப்பட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு வேறு காரணம் உள்ளது” என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இதன் மீதான தீர்ப்பை கடந்த மாதம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, பணியிடை நீக்கம் மற்றும் பணியிட மாற்றத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளார்.

x